Wednesday, June 11, 2014

உக்ரைனில் நடப்பது என்ன?


(உக்ரைன் பிரச்சினை தொடர்பாக, ஒரு அரசியல் கலந்துரையாடல். தோழர் சிந்தனின் கேள்விகளுக்கு எனது பதில்கள்.   "மாற்று" இணையத் தளத்தில் வெளியானது. http://maattru.com/ukrain-situation-kalaiyaran-sanswers/) 

“Dont hate the media, Be the media” என்ற வாசகங்களுடன் இயங்கும் வலைத்தளமான “கலையக“த்தில் இதுவரை ஏறத்தாழ 1000 கட்டுரைகள் எழுதி தொடர்ந்துகொண்டிருப்பவர் தோழர் கலையரசன். உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வும், மற்றனைத்துப்பகுதிகளை எவ்வாறு பாதிக்கிறது என்கிற உலக அரசியலை அனைவருக்கும் புரியும் மொழியில் எளிமையாக நமக்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பவர். சர்வதேச ஊடகங்கள் வழங்கும் செய்திகளின் திணிக்கப்பட்ட பார்வையின் முகத்திரையினை கிழித்துக்காட்டி, அதன் மறைக்கப்பட்ட உண்மைகளை கட்டுரைகளாக தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர். டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் என பன்மொழிப்புலமையும் கொண்டவராகையால், அந்தந்த பிரதேச நிலவரங்களை அவர்களின் மொழிகளினூடாகவே அறிந்துகொண்டு தமிழில் எழுதிவருகிறார்.
“ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா“, “அகதி வாழ்க்கை“, “ஈராக்: வரலாறும் அரசியலும்“, “ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா?“, “காசு ஒரு பிசாசு” ஆகிய அவரது நூல்கள் உலக அரசியல் குறித்த ஆர்வமுடையோர் அனைவரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டியவை. உக்ரைனில் கலகம் உருவாகத் துவங்கியதிலிருந்தே, தொடர்ந்து அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதனை தமிழில் கட்டுரைகளாக நமக்குத் தந்துகொண்டிருக்கிறார். உக்ரைன் குறித்து நமக்குப் பொதுவாக எழும் கேள்விகளைத் தொகுத்து, அதற்கான அவரது பதில்களை “மாற்று” வாசகர்களுக்காகத் தருகிறோம்.

  • ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் சேர வேண்டும் என்பதாக துவக்கத்தில் வெளியுலகிற்கு காண்பிக்கப்பட்ட இப் பிரச்சனை, அதன்பின்னர் பல கோணங்களில் செல்லத் துவங்கிவிட்டதே. உண்மையிலேயே அதுமட்டும் தான் காரணமா? அல்லது வேறு சில வரலாற்றுக் காரணங்களும் உண்டா? விரிவாகச் சொல்லமுடியுமா?


உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கு முன்னர், சில வர்த்தக உடன்படிக்கைகளை செய்து கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது. அன்றைய ஜனாதிபதி, ரஷ்யா ஆதரவு யனுகோவிச் கையெழுத்திட மறுத்து விட்ட பிறகே, நெருக்கடி ஆரம்பமாகியது. உக்ரைனில் மேற்குலக ஆதரவு “புரட்சி” நடப்பது இதுவே முதல் தடவை அல்ல. 

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், அமெரிக்க கோடீஸ்வரர் சோரோஸ் நிதியுதவியுடன் “ஒரேஞ்ச் புரட்சி” நடந்தது. அப்போதும், மேற்குலக நாடுகள் ஆதரித்த ஒருவர் ஜனாதிபதியானார். அப்போதெல்லாம், ரஷ்யா எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. ஐந்து வருடங்களுக்குப் பிறகு, மேற்குலக ஆதரவு அரசியல்வாதிகளின் ஊழல், ஒற்றுமையின்மை காரணமாக, பெரும்பான்மையான உக்ரைனிய வாக்காளர்கள், அடுத்த பொதுத் தேர்தலில் ரஷ்ய ஆதரவு யனுகோவிச்சிற்கு ஓட்டுப் போட்டு வெற்றி பெற வைத்தனர்.

ஆகவே, மேற்குறிப்பிட்ட அரசியல் வரலாற்றை வைத்து ஆராய்ந்தால், இன்றைய உக்ரைனிய நெருக்கடிக்கு, அரசியல் அதிகாரத்தை தவிர வேறு காரணங்கள் இருக்க வேண்டும். “சர்வதேச சமூகத்தின்” எதிர்ப்பை, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை சம்பாதிக்கும் அளவிற்கு, ரஷ்யா விட்டுக் கொடாத நிலைப்பாடு எடுக்கக் காரணம் என்ன? சில நேரம், உக்ரைன் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாவது கூட ரஷ்யாவுக்கு பிரச்சினை இல்லாமல் இருக்கலாம். ஆனால், நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்வது அச்சத்தை உண்டாக்கி இருக்கலாம்.

கிழக்கு ஐரோப்பாவில், சோஷலிச நாடுகள் இருந்த காலத்தில், “கம்யூனிச அபாயத்தை” காரணமாகக் காட்டி, நேட்டோ இராணுவக் கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது. இன்று, உலகில் எங்கேயும் “கம்யூனிச அபாயம்” இல்லை. கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகள், முதலாளித்துவ நாடாகி விட்டன. ஆனாலும், நேட்டோ கலைக்கப்படவில்லை. மாறாக, கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் அங்கத்தவர்களாக சேர்த்துக் கொண்டு வளர்ந்து வருகின்றது. முன்னாள் சோவியத் குடியரசுகளாக இருந்த பால்டிக் கடலோர நாடுகள், ஜோர்ஜியா போன்ற நாடுகள் கூட நேட்டோவில் சேர்ந்து விட்டன. அப்படியானால், ரஷ்யா எதற்காக இப்போது மட்டும், நேட்டோ விஸ்தரிப்பை கண்டு அஞ்ச வேண்டும்?

பத்து வருடங்களுக்கு முன்னர், தலைநகர் கீவில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பணம் கொடுப்பவர் பக்கம் சாயும் கொள்கையற்ற கும்பலாக இருந்தது. ஆனால், இந்த தடவை நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாசிஸ சக்திகள் ஆதிக்கம் செலுத்தின. அதில் ஒரு கட்சியின் தலைவர், பல வருடங்களாக ஜெர்மனியில் வாழ்ந்தவர். உக்ரைனிய பாசிஸ்டுகள், ஐரோப்பிய ஒன்றியம் (ஜெர்மனி), அமெரிக்கா ஆகிய சக்திகள் ஒன்று சேர்வது, வரப்போகும் ஆபத்தின் அறிகுறியாக தென்பட்டது. ஏதாவதொரு இரகசியத் திட்டம் இருக்கலாம்.

இந்த தடவை, மேற்குலக ஆசீர்வாதத்துடன் சதிப்புரட்சி நடத்தி அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளர்கள், கிரீமியாவை அமெரிக்காவுக்கு தாரை வார்க்க இருந்தனர். கிரீமியா தொடர்பாக, இதற்கு முத்திய அரசாங்கம் செய்த ஒப்பந்தத்தை இரத்து செய்து விட்டு, அங்கிருக்கும் ரஷ்ய படைகள் வெளியேற வேண்டுமென கோர இருந்தனர். ரஷ்ய படைகள் வெளியேறிய பின்னர், அங்கு அமெரிக்கப் படைகள் வந்திறங்கி தளம் அமைத்திருக்கும். இந்த இரகசிய திட்டத்தை மோப்பம் பிடித்தறிந்த ரஷ்யா, கிரீமியாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டது.

கிரீமியா ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. அங்கிருந்து இலகுவாக கருங்கடலை கண்காணிக்க முடியும். கருங்கடலை சுற்றி, உக்ரைன், ரஷ்யா தவிர, ரோமானியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்ஜியா போன்ற பல நாடுகள் உள்ளன. மேலும், மத்தியதரைக் கடல் நாடுகளுடன் தொடர்புபடுத்தும் பொஸ்போருஸ் (துருக்கி) நீரிணை ஊடாக செல்லும் கப்பல் போக்குவரத்தை கண்காணிப்பதற்கும் கிரீமியா முக்கியமானது.

19 ம் நூற்றாண்டில், கிரீமியாவை கைப்பற்றுவதற்காக, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், ரஷ்யாவுடன் போரிட்டன. கிரீமியா போரில் பல இலட்சம் பேர் மடிந்தனர். ரஷ்யா மத்திய கிழக்கு பிராந்தியத்திற்குள் நுழைவதை தடுப்பதற்காகவே, அந்தப் போர் நடந்தது. கிரீமிய யுத்தம் தான், உலக வரலாற்றில் நடந்த முதலாவது நவீன காலப் போர் ஆகும்.

உக்ரைன் நெருக்கடிக்கு, கிரீமியா தவிர, வேறு காரணங்களும் இருக்கலாம். ரஷ்யாவில் இருந்து, ஐரோப்பியக் கண்டத்திற்கு செல்லும் பெட்ரோலிய, எரிவாயுக் குழாய்கள் உக்ரைன் ஊடாகச் செல்கின்றன. அவற்றை மேற்குலகின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும் ஒரு நோக்கமாக இருந்தது. உண்மையில், ஆப்கான் போரும் இது போன்ற காரணத்திற்காகவே நடந்தது. துருக்மேனிஸ்தானில் இருந்து, பாகிஸ்தான், இந்தியாவுக்கு செல்லும் எரிவாயுக் குழாய் அமைப்பதற்காக, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தான் மேல் படையெடுத்து இருந்தன.

உக்ரைனின் கிழக்கு மாநிலமான டானியேட்ஸ்க் பகுதியில், இன்னமும் நிலத்துக்கு கீழே தோண்டப்படாத எரிவாயுப் படிமங்கள் இருக்கலாம் என்றும் ஓர் ஆய்வு கூறுகின்றது. அவற்றை ரஷ்யா எடுப்பதற்கு முன்னர், மேற்குலக நாடுகள் முந்தி விட நினைத்தன. இறுதியில், நினைத்த படி எதுவும் நடக்கவில்லை.

  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பில் இருந்த உக்ரைன் அரசைக் கவிழ்த்த சதியில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு எந்தளவிற்கு இருந்தது?


கீவ் நகரில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பகிரங்கமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான கோஷம் எழுப்பியதில் இருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம். ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமல்ல, மேற்கு ஐரோப்பிய நாடுகள் கூட, “உக்ரைனிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்காக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்” என்று தான் கூறி வந்தனர். ஐரோப்பிய ஒன்றியம் என்றால், நாங்கள் ஜெர்மனியை புரிந்து கொள்ள வேண்டும். ஹிட்லரின் காலத்தில் இராணுவ ஆக்கிரமிப்பை நடத்திய ஜெர்மனி, இன்று தனக்கு வேண்டியதை, இலகுவாக பணம் கொடுத்து சாதிக்கலாம் என்று நினைக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில், அமெரிக்கா கருத்து எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால், நேட்டோ அமைப்பில் அமெரிக்கா தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. இராணுவத் தலையீடு நடத்தப் பட வேண்டுமானால், அமெரிக்காவின் ஒத்துழைப்பு தேவை. பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பிரச்சினையில், ஜெர்மனி, அமெரிக்காவுக்கு இடையில் ஒரு பலப்பரீட்சை நிலவுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் இராணுவ பலம் பெறுவதை தடுப்பதும், அமெரிக்காவின் நோக்கமாக இருந்து வந்துள்ளது.

ஆகவே, முன்பு யூகோஸ்லேவிய குடியரசுகளில் நடந்ததைப் போல, உக்ரைன் விடயத்திலும், சில சில முரண்பாடுகள் இருந்த போதிலும், ஜெர்மனியும், அமெரிக்காவும் கூட்டாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. கிரிமியா, டொனியேட்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென நடத்தப்பட்ட தேர்தல்களில், தனியாகப் பிரிந்துசெல்லும் முடிவெடுக்கப்பட்டன. இத்தேர்தல்களை யார் முன்னின்று நடத்தினார்கள்? சாதாரண மக்களின் பங்களிப்பு என்ன?

கிரீமியாவில், கணிசமான அளவு ரஷ்ய அழுத்தம் இருந்தது உண்மை. டொனியேட்ஸ்க்கில் நிலைமை வேறாக இருந்தது. அங்கு பல அரசியல் சக்திகள் ஒன்று சேர்ந்து, அரச கட்டிடங்களை ஆக்கிரமித்திருந்தன. ரஷ்யாவுடன் சேர விரும்பும் ரஷ்ய தேசியவாதிகள் மட்டுமல்ல, ஆப்கானிஸ்தானில் போரிட்டு திரும்பிய முன்னாள் சோவியத் படையினர், மீண்டும் சோவியத் யூனியன் வேண்டுமென விரும்புவோர், உக்ரைனிய கம்யூனிஸ்டுகள் என்று பல வேறுபட்ட அரசியல் சக்திகள், கிளர்ச்சியில் பங்குபற்றின.

ரஷ்யாவில் இருந்து ஊடுருவியவர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும், பெரும்பாலான மக்கள், ரஷ்யாவுடன் சேருவதை விரும்பவில்லை. அவர்களும் ஒரு காலத்தில் உக்ரைனிய தேசியவாதிகளாக இருந்தவர்கள். சோவியத் யூனியனில் இருந்து சுதந்திர நாடான காலத்தில், டொனியேட்ஸ்க் பகுதி மக்கள் பெரும்பான்மையாக ஆதரித்திருந்தனர்.

ரஷ்ய மொழி பேசும் பகுதிகளில், ஆரம்பத்தில் இருந்தே பெரும்பான்மையான மக்கள் கிளர்ச்சிக்கு ஆதரவளிக்க காரணம் இருந்தது. தீவிர உக்ரைனிய தேசியவாதிகளின் அரசு, ரஷ்ய மொழி உட்பட சிறுபான்மை மொழிகள் அனைத்தையும் தடை செய்து சட்டம் இயற்றியது. (ரஷ்யர்கள் தவிர, ஹங்கேரி, ரோமானியா, போலிஷ், இட்டிஷ், கிரேக்க மொழிகளை பேசும் மக்களும் உக்ரைனில் சிறுபான்மையினராக உள்ளனர்.) எல்லா நாடுகளிலும், மொழிப் பிரச்சினை, மக்களை கிளர்ந்தெழ வைக்கக் கூடியது.

  • சுதந்திர கிரிமியா என்பது வரலாற்று ரீதியான கோரிக்கையா? கிரிமியாவின் தற்போதைய நிலையென்ன?


கிரீமியாவில் வாழும் பெரும்பான்மையான ரஷ்யர்கள், நீண்ட காலமாகவே உக்ரைனின் ஒரு பகுதியாக இருப்பதை விரும்பி இருக்கவில்லை. முன்பு சோவியத் யூனியன் இருந்த காலத்திலும் அப்படித்தான். ஆனால், சோவியத் யூனியன் ஒரே நாடாக, எல்லைக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்த படியால், அன்று யாரும் அந்த உணர்வை பெரிதாக மதிக்கவில்லை. உக்ரைன் தனியான சுதந்திர நாடான பின்னர், ரஷ்யா தங்களை சேர்த்துக் கொள்ள மாட்டாதா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு, தற்போதைய நெருக்கடி ஒரு வரப்பிரசாதம் ஆகும். சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

தற்போது, கிரீமியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. உக்ரைன் பெரு நிலப்பரப்புடன் இணைக்கும் சிறிய நிலப்பகுதி, நிலக் கண்ணி வெடிகளால் நிறைந்துள்ளது. உக்ரைனில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து, உக்ரைன் மற்றும் ரஷிய இடதுசாரி/முற்போக்கு இயக்கங்களின் நிலைப்பாடும்/பங்களிப்பும் என்னவாக இருக்கிறது?

உக்ரைன், ரஷ்ய முற்போக்கு/இடதுசாரி இயக்கங்கள், கிரீமியா பிரிவினையையும், டொனியேட்ஸ்க் கிளர்ச்சியையும் ஆதரித்தார்கள். அவர்கள் யாரும், புட்டினை அல்லது ரஷ்ய பெருந் தேசியவாதத்தை ஆதரிக்கவில்லை. ஆயினும், முன்னரைப் போல சோவியத் யூனியன் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தார்கள். (இன்று சோவியத் யூனியனை ஆதரிப்பவர்கள் எல்லோரும் கம்யூனிஸ்டுகள் அல்ல. பெரும்பான்மையானோர் எதிர்பார்ப்பது ஒரு பலமான வல்லரசு. இன்றுள்ள சீனா போன்றது.)

புட்டின் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல, அவரும் ஒரு முதலாளித்துவவாதி தான். ஆயினும், முதலாளிய வல்லரசுகளுக்கு இடையிலான வர்த்தகப் போட்டி, இறுதியில் போருக்கு இட்டுச் செல்லும். முதலாம் உலகப் போருக்கு முன்பிருந்த ஐரோப்பா போன்று தான், இன்றுள்ள நிலைமை உள்ளது. அதனால், இடதுசாரிகள்/முற்போக்காளர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், வரலாற்றுப் போக்கை ஏற்றுக் கொண்டு, அதற்கேற்றவாறு நடந்து கொள்கின்றனர். தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனின் பகுதிகள் தனிநாடாக மாற விரும்புவதை, தனிநாடு கோரும் இன்னபிற சர்வதேச இயக்கங்கள் எப்படிப் பார்க்கின்றன?

அந்த இயக்கங்கள் எல்லாம் அடிப்படையில் தேசியவாதம் பேசினாலும், அவை ஒன்றில் அமெரிக்காவை ஆதரித்து, அல்லது எதிர்த்துக் கொண்டு தமது தனி நாட்டுக்காக போராடுகின்றன. பொதுவாக, பிற நாட்டு விவகாரங்களை அலட்சியப் படுத்துவதற்கு, தேசியவாதிகளுக்கே உரிய குறுகிய மனப்பான்மையும் ஒரு காரணம். ஆகவே, அந்த இயக்கங்களின் நிலைப்பாடு, பெருமளவு மாறுவதற்கு இடமில்லை.


  • உக்ரைன் குறித்துப் பேசாத தமிழ் தேசியவாதிகளின் மவுனத்திற்கு காரணங்கள் என்னவாக இருக்கமுடியும்? 


மேற்குறிப்பிட்ட விளக்கம் அவர்களுக்கும் பொருந்தும். தமிழ் தேசியவாத இயக்கத்தினை வழிநடத்துவோர், மேற்குலகை ஆதரிக்கும் நடுத்தர வர்க்கத்தினர், அல்லது அந்த மனப்பான்மை கொண்டவர்கள் ஆவர். அவர்களது வர்க்க நிலைப்பாட்டில் இருந்து பார்த்து, அமெரிக்கா சொல்வதை எல்லாம் சரியென்று நம்புவார்கள். உலகில் பல விடயங்களுக்கு பொதுவான வரைவிலக்கணம் கிடையாது. பொதுவான தேசியவாதம் எதுவும் உலகில் இல்லை.

  • மூன்றாம் உலகப்போர்? மீண்டும் ஒரு சோவியத் யூனியன்?


இரண்டுமே இப்போதைக்கு சாத்தியமில்லை. பனிப்போர் காலத்தில் இருந்த நிலைமைக்கு உலகம் திரும்பிச் செல்லும். ஆனால், இந்தப் பனிப்போர் சித்தாந்த முரண்பாடு காரணமாக நடக்கவில்லை. 19 ம் நூற்றாண்டில், கிரீமியா போருக்கு முன்பிருந்த நிலைமையும் இப்படித் தான் இருந்தது. அன்று, ஒரு பக்கத்தில், ரஷ்யா தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. மறு பக்கத்தில், பிரிட்டன் தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. இரண்டுமே நேரடியாக மோதிக் கொள்ளவில்லை. ஆனால், பனிப் போருக்குள் மாட்டிக் கொண்டன. பனிப்போர் என்றால், அதன் அர்த்தம், வல்லரசுகள் நேரடியாக மோதிக் கொள்ள மாட்டா. அவற்றின் பாதுகாப்பில் தங்கி இருக்கும், வேறு ஒரு சிறிய நாட்டில், பதிலிப் போர் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும். அது தான் தற்போது உக்ரைனில் நடக்கிறது.

ஒரு பக்கம் உக்ரைனிய மக்கள் செத்து மடிந்து கொண்டிருப்பார்கள். மறு பக்கம், அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா பொருளாதாரப் போரை நடத்திக் கொண்டிருக்கும். முந்திய யூகோஸ்லேவிய போர்கள் மாதிரி, உக்ரைன் போர் நீண்ட காலம் இழுக்குமானால், அமெரிக்காவுக்கும், ஜெர்மனிக்கும், ரஷ்யாவுக்கும் பொருளாதார நலன்கள் கிடைக்கும். முன்பு போல ஆயுத உற்பத்தியும், விற்பனையும் அதிகரிக்கும். எண்ணை, எரிவாயுவின் விலை அதிகரிக்கும். ரஷ்யாவுக்கு வரும், அந்நிய செலாவணியில் அரைவாசிப் பகுதி எரிபொருள் விற்பனையால் கிடைக்கிறது. சர்வதேச சந்தையை கட்டுப்படுத்தும் மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவை தனிமைப்படுத்த விரும்புகின்றன. அது சாத்தியமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • உக்ரைனிலிருந்து நம்முடைய தமிழ் மக்களும் இயக்கங்களும் என்ன பாடம் கற்றுக்கொள்ளமுடியும்?


இந்தியாவிலும், இலங்கையிலும் மேற்கத்திய நாடுகளின் தலையீடு இருக்கவே செய்யும். அவர்கள் ஒரு பக்கம் அரசாங்கத்தை ஆதரிப்பார்கள், மறு பக்கம் தமிழ் இயக்கங்களையும் ஆதரிப்பது போல நடிப்பார்கள். அவ்வாறு, இரண்டு தரப்பினரின் விசுவாசத்தையும் பெற்றுக் கொள்வார்கள். அதனை உணர்ந்து கொள்ளாமல், மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு நடந்து கொண்டால், எந்த மாற்றமும் வரப் போவதில்லை. ஆகவே, தமிழ் இயக்கங்கள் ஒரு தலைகீழான கொள்கை மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஏகாதிபத்திய நுகத்தடியில் இருந்து விடுவித்துக் கொண்டால், அது தேசிய விடுதலைக்கான கதவுகளை திறந்து விடும். அதனால் தான், 2 ம் உலகப் போருக்கு பிந்திய உலகில், காலனியாதிக்கதில் இருந்து விடுதலையடைய போராடிய இயக்கங்களை, அன்றிருந்த சோவியத் யூனியன் நிபந்தனை இன்றி ஆதரித்தது.




உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

No comments: